நான் …பெண்..காத்தாடி ..
நான் …பெண்..காத்தாடி ..
இன்றல்ல நேற்றல்ல ..என்றைக்குமே எனக்கு காத்தாடி என்றால் கொள்ளை பிரியம். காத்தாடியை பார்த்தாலே மனதிற்குள் ஒரு துள்ளல் எழும். பெயருக்கு ஏற்றபடி காற்றில் ஆடி ஆடி, காத்தாடி மேலே பறக்கும் அழகே தனி தான். மெல்லிய நூலால் கட்டப் பட்ட காத்தாடி உயரே பறக்க பறக்க , அவிழ்த்து விட்ட வால் போல, கவலைகள் ஏதுமின்றி, அது அங்கும் இங்கும் பறந்து கொட்டமடிப்பது பார்க்கவே வெகு ஜோராக இருக்கும்.
அன்றைக்கு கடை தெருவிற்கு போய் விட்டு வந்தபோது எனது பக்கத்த வீட்டு நண்பன் கண்ணைப் பறிக்கும் ஒரு வண்ணக் காத்தாடியை வீட்டு மொட்டி மாடியில் நின்று கொண்டு ஒய்யாரமாய் விட்டுக் கொண்டிருந்தான். ஜிவ் வென்று உயரே பரந்த காத்தாடியை பார்க்கும்போது கைகள் துரு துருத்து. மனது அதனுடன் சேர்ந்து ரெக்கை விரித்துப் பறந்தது. இதுவரை என்றுமே காத்தாடி விட்டது இல்லை நான். யாரும் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. உதவியதும் இல்லை.
நான் “ஆ’ வென்று திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த என் நண்பன் , ” நீ வேடிக்கை பார்ப்பதற்கு தான் லாயக்கு ” என்பது போன்ற அலட்டலுடன் அதை மேலும் மேலும் உயரமாய் பறக்க விட்டான். அவன் காத்தாடியும் அவனைப் போன்றே ஆணாக இருக்குமோ..? எதை பற்றியும் கவலை இல்லாமல் திமிறிக்கொண்டு மேலே மேலே பறந்து கொண்டிருந்தது. பறந்த காத்தாடியுடன் சேர்ந்து என் மனதும் அலை பாயத் தொடங்கியது. இன்றைக்கு எப்படியும் இவன் முன்னால் காத்தாடி ஒன்றை பறக்க விட்டே தீர வேண்டும் என்று மனதிற்குள் சபதமிட்டேன் நான்.
கோடிக் கடையில் பத்து ரூபாய் கொடுத்து நானும் ஒரு காத்தாடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழையாமல் , நேராக அவனிருக்கும் மொட்டை மாடிக்கு சென்றேன் . அவனுக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் என்னில் கொழுந்து விட்டு எரிந்தது.
கடைக்காரன் கொடுத்த மாஞ்சாக் கயிற்றில் காத்தாடியை ஒரு வழியாக கட்டி மேல் நோக்கி அதை செலுத்தினேன். ம்ஹூம்..கொஞ்சமும் அசைய வில்லை காத்தாடி..அது கீழே செங்குத்தாய் இறங்குவதிலேயே பிடிவாதமாய் இருந்தது. இம்மியும் மேலே பறப்பதாய் இல்லை.
மேலும் சில தடவைகள் முயற்சித்துப் பார்க்கையில் தெரிந்து கொண்டேன் மனதை அடக்குவதே வெகு சுலபம் என்று. காத்தாடி டிமிக்கி தான் கொடுத்துக் கொண்டிருந்தது.
எத்தனை முயன்றாலும்
பறக்காத காத்தாடி ..
நூலோடு நானும்
நூலாகிப் போனேன்..
மாற்றான் காத்தாடி தான் மேகத்தில் பறக்கும் போலிருக்கிறது. என் காத்தாடி மறந்தும் , மருந்துக்கும் மேலே பறப்பதாக இல்லை. என் தளராத முயற்சி அருகில் இருந்த என் நண்பனின் ஏளனம் கலந்த வெற்றிக் களிப்பில் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க் கொண்டிருந்தது.
என் நண்பனை ஓரக் கண்ணால் பார்த்தவாறே , அவன் செய்வது போல நூலை பிடித்து இப்படி அப்படி என்று ஆட்டினேன். என்ன செய்தாலும் மேலே பறக்காமல் தரையில் தவழ்ந்து குழைந்து சண்டித் தனம் செய்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் பறந்தது ..என் பொறுமை … அம்மா வேறு சீக்கிரம் வரச் சொல்லி அனுப்பியது நினைவுக்கு வந்து என்னை அலை கழித்தது.
ஏனோ எல்லாவற்றின் மீதும் கோபம் பொத்துக் கொண்டு வர , என் வீம்பை கொஞ்சம் தளர்த்தி, என் நண்பனை பார்த்து கொஞ்சம் உதவேன் என்பது போல ஒரு “கெஞ்சல்” பார்வையை வீசினேன். அவனோ ” உனக்கெல்லாம் எதுக்கு இது..பேசாமல் நான் விடுவதை பார்த்துட்டு போவியா..?” என்று கொக்கரித்தான்.
காத்தாடி பெண்களின்
கண்களுக்குத்தான்..
கைகளுக்கல்ல ..
என்று சொன்ன நண்பன் இப்போது விரோதியாய் தெரிந்தான். காத்தாடி வாங்குவதும் ஒரு கலை தெரியுமா..நல்ல மாஞ்சாக் கயிற்றை வீட்டிலேயே செய்வதும் ஒரு கலை..அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது.. உன் காத்தாடி என்ன செய்தாலும் என் காத்தாடி போல பறக்கவே பறக்காது …போய் உங்க அம்மா வாங்கி வரச் சொன்ன அப்பளத்தை கொடுத்துட்டு வா ..கீழே எல்லோரும் உன்னை தேடிட்டு இருக்காங்க ..என்று கூறி கட கடவென சிரித்தான் என் நண்பன் . ஆண் திமிர்..!
கோபம் கோபமாய் வந்தது எனக்கு. ஆனால் கோபம் என்றைக்கு பெரிதாக சாதித்தது. கிழித்துப் போட்டேன் காத்தாடியை.. நான் கிழித்தது அவன் காத்தாடியை என்பதால் , இப்போது அவன் கையில் என் காத்தாடி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தது.
” இதோ பார்..அதோ பார் ..எப்படி பறக்குது பார் “, என்று என்னை பார்த்து போங்கு காட்டினான் அவன். இப்பொழுது முன்பை காட்டிலும் ஏளனமாய் அவன் குரல் ஒலித்தது போலிருந்தது. . என் காத்தாடியை எனக்கே காட்டி இன்னமும் உயர உயர பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அவன்.
இருந்தாலும் சிலிர்ப்பாய் மனதிற்குள் மகிழ்ச்சி பரவியது. பரவிய மகிழ்ச்சி உந்திக்கொண்டு தானாக வெளிப்பட, குதூகலம் நிறைந்த குரலில் சொன்னேன்..” பறப்பது என் காத்தாடியாக்கும்..அது தான் அத்தனை உயரமாய் பறக்கிறது.. “
மேலும் சும்மா இராமல், ” 12th ரிசல்ட் அடுத்த வாரம் வெளி வருது ..அப்ப தெரியும் யாரோட பட்டம் ரொம்ப உயரமாய் பறக்கும் என்று.. வெவ்வே ..”, என்று ஒழுங்கு காட்டி விட்டு சிட்டாக வீட்டிற்குள் பறந்தேன்.
நுழையும்போதே அம்மா கத்தினார் …” போனா சீக்கிரம் வர தெரியாது..அப்பளம் வாங்கி வர எவ்வளவு நேரம்… ? இன்னமும் பதினைந்தே நிமிஷத்தில், உன்னை பெண் பார்க்க மாபிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்களாம்..மச மசன்னு நிற்காம, சீக்கிரம் போய் ரெடியாகு…”
திகைப்புடன் நான்….! என் மனக் கண்ணில், சற்றுமுன் என்னால் கிழி பட்ட நண்பனின் காத்தாடி , அவனின் அதே ஏளனம் கலந்த சிரிப்புடன் என்னை பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரிப்பது போல இருந்தது. மெல்லிய வருத்தம் பரவ ஜன்னலின் ஊடே வெறித்துப் பார்த்தேன்.. அவனிடம் கொடுத்திருந்த என் காத்தாடி , இப்போது மின் கம்பத்தில் சிக்குண்டு வாலருபட்டு துடியாய் துடித்துக் கொண்டிருந்தது..
நான் .. பெண் ..
காத்தாடி..
என்றுமே இயங்குவதில்லை..
இயக்கப் படுகிறேன்..
என்பது புரிய வெகு நேரமாகவில்லை..
டிஸ்கி-1: ஐந்து வருடத்திற்கு முன்பு காத்தாடி விட்ட என் நண்பன் பேமென்ட் சீட்டில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டான். அவனை விட இருபது சதவிகிதம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நான் … இப்பொழுது என் நான்கு வயது பெண்ணிற்கு காத்தாடி விடக்( இயக்கக்) கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் ..
டிஸ்கி-2 : இது ஆங்கிலத்தில் நான் எழுதிய (Me, The Kite) proem -மின் மொழி பெயர்ப்பு .. சிறுகதை வடிவில் கொடுத்திருக்கிறேன்.. I have written “Me, The Kite ” on 15/08/02 just 2 months after I got married ..haha
டிஸ்கி-3:.. இதில் வரும் நான் நான் அல்ல..நான் கோபம் வந்தால் வெறும் காத்தாடியை கிழிக்கும் ரகம் இல்லை . ———–…. ஹிஹி







